search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் எவ வேலு"

    • திருவண்ணாமலை கோவிலை ஆன்மீக மக்களுக்கு ஒப்படைத்த ஆட்சி கலைஞர் ஆட்சி.
    • எப்படியாவது முயற்சி செய்து அ.தி.மு.க. நண்பர்கள் 2-வது இடத்துக்கு வந்து விடுங்கள்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அண்ணாத்துரைக்கு ஆதரவாக தனது சொந்த தொகுதியான திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவண்ணாமலை கோவிலை ஆன்மீக மக்களுக்கு ஒப்படைத்த ஆட்சி கலைஞர் ஆட்சி. இப்போதும் சுற்றுலாத் துறையிடம் ஒப்படைப்போம் என்கிறார்கள். அதற்கு விடமாட்டோம்.

    அ.தி.மு.க.விடம் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து எப்படியாவது 2-வது இடத்துக்கு வந்து விடுங்கள். பா.ஜனதாவை வரவிடாதீர்கள். எப்படியாவது முயற்சி செய்து அ.தி.மு.க. நண்பர்கள் 2-வது இடத்துக்கு வந்து விடுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் தொடங்கப்பட்டு கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது.
    • தமிழர்களின் வீர விளையாட்டை பறை சாற்றும் வகையிலே இந்த மைதானத்தை தமிழக முதலமைச்சர் திறந்து வைப்பார்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங் காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் சுமார் 66 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதான பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆய்விக்கு பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழர்களின் வீர விளையாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு மைதானம் அமைய வேண்டும் என முதலமைச்சர் சட்ட சபையில் அறிவித்தபடி 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் தொடங்கப்பட்டு கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது.

    இந்த மாத இறுதியில் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். திறப்பு விழா அன்று மிக பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.

    அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக் கட்டுக்கு அடுத்த படியாக 4-வது ஜல்லிக்கட்டு போட் டியாக நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு உலக தரத்தில் இங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு இணையாக இந்தியாவிலேயே ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம் கட்டப்பட்டுள்ளது. நமது தமிழ் நாட்டில்தான் கால்நடை மருந்தகம், காத்திருப்பு கூடம், சுகாதார நிலையம், வாடிவாசல், அலுவலகம், தற்காலிக விற்பனை கூடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, மழைநீர் வடிகால் வசதி, குடிநீர் வசதி, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி, மருத்துவ வசதி, கால்நடை மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகள் உள்ளது. தென்னக மக்கள் பாராட்டும் வகையில் இந்த மைதானம் திறப்பு விழா நடைபெறும். தமிழர்களின் வீர விளையாட்டை பறை சாற்றும் வகையிலே இந்த மைதானத்தை தமிழக முதலமைச்சர் திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சங்கீதா, எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், தளபதி, மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • சோதனையின் போது அருணை கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 20 வீரர்கள் வருமான வரி சோதனையின் போது கல்லூரி வளாகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 3-ந்தேதி வருமானவரி சோதனை நடைபெற்றது.

    இந்த சோதனை தொடர்ச்சியாக 5 நாட்கள் வரை நீடித்தது. இந்த சோதனையின் போது எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் அங்குலம் அங்குலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

    கல்லூரி வளாகத்தில் உள்ள அமைச்சர் எ.வ.வேலு வீட்டிலும் சோதனை நடைபெற்றது. வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய இந்த அதிரடி சோதனையில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

    எ.வ.வேலுவுக்கு நெருக்கமான தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

    திருவண்ணாமலை அருணை கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 3 அறைகளை பூட்டி வருமானவரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களிலும் அப்போது ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 80 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த நிலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள அருணை மருத்துவ கல்லூரி மற்றும் செங்கல்பட்டு குன்னத்தூர் ஆகிய 2 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    அருணை மருத்துவ கல்லூரியில் கடந்த முறை சோதனை நடத்தியபோது சீல் வைக்கப்பட்ட 3 அறைகளிலும் சீலை அகற்றி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அறையில் இருந்த ஆவணங்கள் உள்ளிட்டவை மீண்டும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இன்று காலை 11 மணி அளவில் 6 வருமானவரி துறை அதிகாரிகள் தனித்தனியாக 3 கார்களில் வந்தனர். பின்னர் அவர்கள் அருணை கல்லூரியில் மீண்டும் சோதனை நடத்தியதுடன் சீல் வைக்கப்பட்ட அறையிலும் ஆய்வு செய்தனர்.

    இந்த சோதனையின் போது அருணை கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 20 வீரர்கள் வருமான வரி சோதனையின் போது கல்லூரி வளாகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    சோதனை நடைபெற்ற 3 அறைகள் முன்பும் மத்திய படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    செங்கல்பட்டு குன்னத்தூரில் ராஜ பிரகாஷ் என்கிற ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினர் ஒருவர் குன்னத்தூர் பகுதியில் 35 ஏக்கர் நிலத்தை சமீபத்தில் வாங்கியதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாகவே ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு 2 வாரங்களே ஆன நிலையில் மீண்டும் அவர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அதிகாரிகள் பல்வேறு ஆவணங்கள் மற்றும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
    • திருவண்ணாமலையில் உள்ள காண்ட்ராக்டர் வெங்கட் என்பவர் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களின் அலுவலகங்கள், அமைச்சரின் முகாம் அலுவலகம், வீடு ஆகியவற்றில் நேற்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் களத்தில் இறங்கி சோதனையில் ஈடுபட்டனர். இரவு விடிய விடிய சோதனை நடந்தது. இன்று 2-வது நாளாக சோதனை நீடித்தது.

    கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக எ.வ.வேலு நேற்று திருவண்ணாமலை வந்திருந்தார். அவர் இருந்தபோதே வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

    அதிகாரிகள் பல்வேறு ஆவணங்கள் மற்றும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

    திருவண்ணாமலையில் திண்டிவனம் ரோட்டில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ. வே.கம்பன் வீடு உள்ளது. இங்கு நேற்று மாலை வருமானவரித்துறை அதிகாரிகள் சென்றனர். அங்கு தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல திருவண்ணாமலையில் உள்ள காண்ட்ராக்டர் வெங்கட் என்பவர் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சோதனை நடந்து வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அமைச்சருக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடந்ததால் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • பயணியர் கப்பல் போக்குவரத்தை நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
    • தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினைத் துவக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

    நாகை:

    அமைச்சர் எ.வ.வேலு இன்று நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, இலங்கையில் உள்ள காங்கேச துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணியர் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு கடல்சார் வாரியம், ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை மற்றும் வெளியுறவுத் துறை மூலம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் விரைவு பயணியர் கப்பல் போக்குவரத்தை நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    இந்த பயணியர் கப்பல் பயணம், வெளிநாட்டு பயணம் என்பதால் ஒன்றிய அரசின் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கையாள ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

    நாகப்பட்டினம் துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினைத் துவக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

    இலங்கை மக்கள் குறிப்பாக, தமிழ் மக்கள் தங்களின் கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள், வணிகம், ஆன்மீகம் மற்றும் சுற்றுலா ஆகிய தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைவதுடன், தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்கள் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பகுதிகள், கலாச்சாரப் பகிர்வு, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் மோடி, ஸ்மிருதி இரானி பேசியுள்ளது பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தும் என்பதால் அப்பேச்சுக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
    • அமைச்சர் எ.வ.வேலுவின் உரையை தவறாக மேற்கோள் காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

    பாராளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர். பாலு சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,

    நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது, 'இந்தியா' குறித்து தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலு கூறியதை மேற்கோள் காட்டி, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் பேசியுள்ளனர்.

    பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சை தவறாக மேற்கொள் காட்டி பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியுள்ளது பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தும் என்பதால் அப்பேச்சுக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    கடந்த 5.8.2023 அன்று சென்னை அண்ணாசாலை மாவட்ட அரசு நூலகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் உரையை தவறாக மேற்கோள் காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    • கடற்கரையில் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட பணி தான் கடலில் பேனா நினைவு சின்னம் என்பது.
    • கடலில் பேனா சின்னம் அமைக்க மதிப்பீடு எதுவும் தயார் செய்யப்படவில்லை.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகம் கோட்டை கொத்தளத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட கொடிகம்பத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுதந்திர தினத்துக்காக தலைமைச் செயலகத்தில் உள்ள கொடிக்கம்பத்தை ஆய்வு செய்தபோது துருப்பிடித்திருந்தது தெரியவந்ததால் கொடி கம்பத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இதற்காக ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. இன்னும் ஓரிரு தினங்களில் புதுப்பிக்கும் பணி நிறைவடையும்.

    மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணி என்பது இரண்டு கட்டங்களாகும். பேனா நினைவுச் சின்னத்தால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லை என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்து உள்ளது.

    இப்போது கடற்கரையில் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட பணி தான் கடலில் பேனா நினைவு சின்னம் என்பது.

    ஆனால் கடலில் பேனா சின்னம் அமைக்க மதிப்பீடு எதுவும் தயார் செய்யப்படவில்லை. இப்போது கடற்கரையில் கருணாநிதி நினைவிட கட்டுமான பணி 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குளிர்சாதன வசதி கொண்ட படகில் பயணம் செய்ய ரூ.450 வீதமும் சாதாரண படகில் பயணம் செய்யரூ.350 வீதமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    • பாலம் அமைக்கும் பணி இன்னும் ஓராண்டுக்குள் நிறைவுபெறும்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் இன்று அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இந்த 2 படகுகளிலும் தற்போது சுற்றுலா பயணிகள் கடலில் உல்லாச சவாரி செய்யும் வகையில் இன்று முதல் இயக்கப்பட்டுஉள்ளது. இந்த படகுகளில் குளிர்சாதன வசதிகளும் செய்யப்பட்டுஉள்ளது.

    இதில் குளிர்சாதன வசதி கொண்ட படகில் பயணம் செய்ய ரூ.450 வீதமும் சாதாரண படகில் பயணம் செய்யரூ.350 வீதமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலை இடையேரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழையினால் பாலம் அமைக்கும்பணி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டுஉள்ளது. இந்த பாலம் அமைக்கும் பணி இன்னும் ஓராண்டுக்குள் நிறைவுபெறும்.

    இவ்வாறு அமைச்சர் எ.வ. வேலு கூறினார்.

    • விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
    • ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியினை சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் டெண்டர் எடுத்து உள்ளது.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வருடத்துக்கு 75 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப்படியான பாறைகளும் உள்ளது. இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படுவதில்லை.

    இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியினை சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் டெண்டர் எடுத்து உள்ளது. இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளிநாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது போல இந்த கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட ஆய்வு பணி கடந்த ஜூன் மாதம் நடந்தது. அப்போது விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகிய 2 பாறைகளின் மாதிரிகளை சேகரித்து சென்னை ஐ.ஐ.டி.க்கு அனுப்பி பாறைகளின் தன்மையை ஆய்வு செய்யும் பணி நடந்தது. இந்த ஆய்வுகளின் முடிவுகளை பொறுத்து விரைவில் பாலத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் ஒரு வருடத்துக்குள் பாலப்பணிகள் நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த கண்ணாடி கூண்டு பாலப்பணியின் தொடக்க விழா இன்று காலை விவேகானந்தர் பாறையில் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவேகானந்தர் நினைவு மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    முன்னதாக விவேகானந்தர் பாறையில் ரூ.7 கோடி செலவில் கூடுதல் படகு கட்டும் தளம் அமைக்கும் பணியையும் அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட கலெக் டர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ் ராஜன், ஆஸ்டின், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்தசாரதி, மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள் மற்றும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கடந்த 7 மாதங்களாக உல்லாச படகு சவாரி திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
    • கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இன்று முதல் கடலில் உல்லாச படகு சவாரி தொடங்கப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.

    இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த படகுகள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய பெயர்களை தாங்கிய 2 அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா துறை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கியது. இதில் 150 இருக்கை வசதிகள் கொண்ட தாமிரபரணி படகில் 75 இருக்கைகள் "குளுகுளு" வசதி கொண்டதாகும்.

    அதேபோல 150 இருக்கைகள் கொண்ட திருவள்ளுவர் படகில் 19 இருக்கைகள் "குளுகுளு" வசதி கொண்டதாகும். மீதி உள்ள 131 இருக்கைகள் சாதாரண வசதி கொண்டதாகும். இந்த 2 அதிநவீன சொகுசு படகுகளும் கோவாவில் வடிவமைக்கப்பட்டு கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது.

    கன்னியாகுமரி கடலின் தன்மை அடிக்கடி மாறுவதால் இந்த 2 அதிநவீன படகுகளும் விவேகானந்த மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படாமல் கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகும் நிலையில் படகு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடந்தது. இந்த 2 அதிநவீன சொகுசு படகுகளையும் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரையில் கடலில் உல்லாச படகு சவாரி நடத்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் முடிவு செய்தது.

    இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக பொது மேலாளர்கள் கணேசன் (நிதி), கேப்டன் தியாகராஜன் (இயக்கம்) ஆகியோர் கன்னியாகுமரி படகு துறையை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆனால் கடந்த 7 மாதங்களாக இந்த உல்லாச படகு சவாரி திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடலில் உல்லாச படகு சவாரி தொடங்கப்பட்டு உள்ளது.

    இதில் குளிர்சாதன வசதியுடன் கூடிய அறைகளில் அமர்ந்து பயணம் செய்வதற்கு நபர் ஒன்றுக்கு தலா ரூ.450 வீதமும் சாதாரண அறைகளில் அமர்ந்து பயணம் செய்வதற்கு நபர் ஒன்றுக்கு தலா ரூ.350 வீதமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த உல்லாச படகு சவாரியை தமிழக பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், தி.மு.க. மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ்ராஜன், உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் பூதலிங்கம், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, கொட்டாரம் பேரூர் செயலாளர் வைகுண்ட பெருமாள், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) கணேசன், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக துணை பொது மேலாளர் (இயக்கம்) தியாகராஜன், மேலாளர் செல்லப்பா, துணை மேலாளர்கள் பழனி, ராஜசேகரன், தமிழ்நாடு கடல்சார் வாரிய துணை தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் நடராஜன், மாநில துறைமுக அதிகாரி கேப்டன் அன்பரசன், துறைமுக பாதுகாப்பு அதிகாரி தவமணி, உதவி துறைமுக பாதுகாப்பு அதிகாரி ராஜேந்திரன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் உதயகுமார், நாகர்கோவில் ஆர்.டி.ஓ.சேதுராமலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது.
    • விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

    கன்னியாகுமரி:

    நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    அவர்கள் கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப்படியான பாறைகளும் உள்ளன. இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படுவதில்லை.

    இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும் பல்வேறு தமிழ் அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

    அதன்படி ரூ.37 கோடி செலவில் அமைய உள்ள கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும்போது தாங்கள் நடந்துசெல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளிநாடுகளில் அமைக்கப்பட்டு உள்ளது போல அமைக்கப்பட உள்ளது.

    இதற்கான முதற்கட்ட ஆய்வு பணி கடந்த ஜூன் மாதம் நடந்தது. அப்போது விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகிய 2 பாறைகளின் மாதிரிகளை சேகரித்து சென்னை ஐ.ஐ.டி.க்கு அனுப்பப்பட்டது. அங்கு பாறைகளின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்யும் பணி நடந்தது. இந்த ஆய்வுகளின் முடிவுகளை பொறுத்து விரைவில் பாலத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் ஒரு வருடத்துக்குள் பாலப்பணிகள் நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் கண்ணாடி கூண்டு பாலப்பணி தொடக்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (24-ந்தேதி) நடக்கிறது. நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு விழாவில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். விழாவில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர். மேயர் மகேஷ் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    விழாவில் பங்கேற்பதற்காக அமைச்சர் எ.வ. வேலு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அவர் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்ய உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    • கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் செய்யாத பல்வேறு திட்டங்களை பலதரப்பட்ட மக்களுக்காக தி.மு.க. ஆட்சியில் செய்துள்ளது.
    • பாரதிய ஜனதாவின் சலசலப்பு தமிழகத்தில் எந்த காலத்திலும் எடுபடாது.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. அண்ணாகாலனி பகுதி சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    ஒரு காலத்தில் பெண்கள் படிக்க முடியாத நிலை இருந்தது. அப்போது பெண்கள் படிக்க வேண்டும் என்று சொன்னது திராவிட இயக்கம். முன்பெல்லாம் ஆண்களைவிட பெண்கள் குறைவாக படித்திருப்பார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. இப்போது ஆண்களை விட பெண்கள் அதிகம் படித்தவர்களாக இருக்கிறார்கள்.

    பெண்கள் தொடர்ந்து உயர் கல்வி படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்து மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கி வருகிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதனால் பெண்கள் உயர் கல்வி படிக்கும் சதவீதம் அதிகரித்து உள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

    கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் செய்யாத பல்வேறு திட்டங்களை பலதரப்பட்ட மக்களுக்காக தி.மு.க. ஆட்சியில் செய்துள்ளது. தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இரட்டை ஆட்சி முறையை கவர்னர் தற்போது கொண்டு வர முயற்சித்து வருகிறார்.

    தி.மு.க. மற்றும் கலைஞரின் உடன்பிறப்புகள் இருக்கும் வரை அதை அனுமதிக்க மாட்டோம். தாய்மொழி தமிழ் மற்றும் வர்த்தகத்திற்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும் போது இந்தியை திணிக்க பல்வேறு வகைகளில் கவர்னர் முயற்சிக்கிறார். கவர்னர் மாளிகையில் மாணவர்கள், தொழிலதிபர்கள் என பல தரப்பினரை அழைத்து அவரது கருத்துக்களை திணித்து வருகிறார். தமிழக மக்களின் வரிப்பணத்தில் தமிழகத்தின் பண்பாட்டிற்கு எதிரான கருத்தை திணித்து வருவதன் காரணமாகவே தமிழக அரசுக்கும் கவர்னருக்கும் முரண்பாடு இருக்கிறதே தவிர தனிப்பட்ட முறையில் எந்த ஒரு காரணமும் இல்லை.

    பெரியார் முதல் தற்போது உள்ள தி.மு.க. அரசு வரை விரும்புவது சமூகநீதி. ஆனால் கவர்னர் கொண்டு வர முயல்வது மனுதர்மம். பாரதிய ஜனதாவின் சலசலப்பு தமிழகத்தில் எந்த காலத்திலும் எடுபடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×